பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாறும் உவேசாவும்

ஊடாட்டம்

உரையாடல் வெளி

 ~ தமிழ் காமராசன்

விமர்சன சிந்திப்பின் தேவை பற்றிய ஓர் குறிப்பு

இன்று உ.வே.சாமிநாதையர் (1855-1942) அவர்களின் பிறந்த நாள். அவர் தோன்றி 169 ஆண்டுகளும், மறைந்து 82 ஆண்டுகளும் ஆகின்றன. இவர் மிக முக்கியமான பழந்தமிழ் நூல் பதிப்பாசிரியர். நூல் பதிப்பில் பல நியமங்களை உருவாக்கியவர். இவற்றில் எல்லாம் சந்தேகம் இல்லை.

ஆனால் இன்றும் திறன் மிக்க பல இலக்கிய – வரலாற்று விமர்சகர்கள் உவேசாவை பழந்தமிழ் நூல் பதிப்பில் முதலாமவராகவும் இறுதியானவராகவும் சித்தரிக்கும் சிந்திக்கும் போக்கை கைவிடவில்லை. இதனால் தமிழ் நூல் பதிப்பு முறைக்கோ, வரலாற்றுக்கோ ஒரு பயனும் இல்லை. உவேசாவுக்குக்கூட என்ன பயன் கிடைத்தது என்று தெரியவில்லை. “தமிழ் தாத்தா” கதையாடல் மூலம் பார்ப்பன வகுப்பு தேசியவாத இயக்கத்திற்கு அறிவு அரசியல் அதிகாரம் கிடைத்துள்ளது. அவ்வளவுதான்.

குறைந்த பட்சம், 1812இல் – உவேசா பிறப்பதற்கு 43 ஆண்டுகளுக்கு முன்னர் வெளிவந்த முதல் திருக்குறள் பதிப்பு வெளிவந்தது. இதைப் பதிப்பித்தவர் “தஞ்சை நகர மலையப்ப பிள்ளை குமாரன் ஞானப்பிறகாசர்.” இவரைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? தேவாரத்தையும் சிவஞானபாடியத்தையும் பல பிரதிகளைக் கொண்டு பாடபேதங்களுடன் பதிப்பித்த சுவாமிநாதப் பண்டிதரைப் பற்றி என்ன தெரியும்? பன்னிரு சாத்திரங்களையும் அவற்றின் பல உரைகளையும் திருமந்திரத்தையும் பல பிரதிகளைக் கொண்டு பதிப்பித்த கொன்றை மாநகரம் சண்முகசுந்தர முதலியரைப் பற்றி என்ன தெரியும்?

அண்மையில், ஆ. இரா. வேங்கடாசலபதி அவர்கள் உவேசாவைப் பற்றி சொற்பொழிவாற்றும்போது, பதிப்பிக்கும் நூலின் பெருமை பதிப்பாசிரியருக்குச் சென்று சேர்ந்துவிடக் கூடாது என்று சொன்னார். ஆனால் எனக்கு என்னவோ, சங்க இலக்கியங்களின் ஒளியையும் சேர்த்து உவேசாவுக்கு வழங்கிவிடுகிறோம் என்று தோன்றுகிறது. அதனால் உவேசா பற்றியும், அவரது பதிப்புகள் பற்றியும் விதந்து விதந்து, மாய்ந்து மாய்ந்து பேசித் திரிகின்றோம்.

உவேசாவின் 169ஆம் பிறந்த நாளின்போதுகூட, பழந்தமிழ் நூல் பதிப்பு வரலாற்றில் மற்ற பெரும் பதிப்பாசிரியர்களுக்கிடையே உவேசாவின் இடம் என்ன என்று சிந்திக்க முடியாமல் போனால், அது உவேசாவுக்கு – தமிழ் நூல் பதிப்பு முறைக்கு – வரலாற்றுக்கு செய்யும் பெருமை அல்ல, சிறுமையே ஆகும்.

சரி, இத்துடன் நிறுத்திக் கொண்டு உவேசாவுக்குப் பிறகு பெரும் பதிப்பாசிரியராக விளங்கிய எஸ். வையாபுரிப் பிள்ளை, உ.வே.சா. பற்றி கூறிய மதிப்பீட்டைப் பார்ப்போம்:

இவர் தாம் அறிந்த இலக்கிய விஷயங்களை அச்சில் வெளியிடும்வரை அடக்கமாக வைப்பாராயினர். தாம் செய்துவரும் தொண்டுகளிலும் அடக்கத்தையே கைக்கொண்டனர். இவர் இல்லத்திலுள்ள சுவடி நிலையத்தைக் கண்டுகளிக்கும் பேறுகூடக் கவி ரவீந்திரநாதர் ஒரு சிலரே பெற்றுள்ளனர். பிறர் கண்களில்படும்படியாக நூல் ஆராய்ச்சி செய்வதை அறவே விட்டு விட்டனர். அடக்கமாக, பிறரால் காண முடியாதபடி, தனியாக அமைந்த ஓர் அறையில் தாமும் தமது சிஷ்யர்களுமிருந்து நூற் பரிசோதனை செய்து வரலாயினர். ஆகவே பெரும்பாலும் இன்ன காலத்தில் இன்ன நூல் வெளிவரும் என்பது இவர் சிஷ்யர்களுக்கன்றி ஏனையோர்களுக்குத் தெரியமாட்டாது. சிஷ்யர்களும் இந்த அடக்கத்தையே கையாண்டு வந்தனர். ஏட்டுச் சுவடிகளேயன்றி இவர்கள் படித்து வந்த அச்சுப் புத்தகங்களைக்கூட இரவல் வாங்க முடியாது…

இங்கனமே, பிரதிகள் தேடிப் பண்டை நூல்களைப் பதிப்பிடுவதில் முயன்றுவரும் அறிஞர்களுக்குப் பிரதிகளை எளிதில் கிடைப்பதா ? இல்லை. ஐயருக்கு இந்த நல்லூழும் விதிக்கப்படவில்லை. இதனால் ஒருவருக்கும் இவர் தம்மிடமுள்ள பிரதிகளைக் கொடுத்ததில்லை என்பது என் கருத்தல்ல. எனக்குச் சில பிரதிகள் உதவியிருக்கிறார்கள் என்பதை நன்றியுடன் பாராட்டுகிறேன். நானும் இவர்களுக்குப் பிரதிகள் உதவியுள்ளேன். கேட்போர் ததியையும் நோக்கத்தின் தூய்மையையும் மாத்திரம் கருதி இவர் பிரதிகள் உதவுவதில்லை. விலக்க முடியாத நிர்பந்தம் ஏற்பட்டால்தான் இவர் உதவுவர். அவ்வாறு தரும் பிரதிகளும் பெரும்பாலும் பயனற்றனவாகவே இருக்கும். தாம் பல ஆண்டுகளாக அரிதின் தேடி வைத்த பொருளை ஒருவர் கேட்டவுடனே கொடுத்துவிட எளிதில் மனம் வருமா ? ஆனால், தாம் உதவாதது மாத்திரமே யன்றி, பிற பேரறிஞர்களும் நூலைப் பதிப்பிடுவோர்க்கு உதவுதல் கூடாது என்று இவர் கடிந்துரைத்ததை நான் நன்கு அறிவேன். கம்பர்விலாசம் இராஜகோபாலையங்கார் அகநானூற்றைப் பதிப்பிட எடுத்துக்கொண்ட பொழுது, அவருக்கு ஸேது ஸம்ஸ்தான மகாவித்வான் ரா. ராகவையங்கார் பிரதிகள் கொடுத்தும் பிறவாறும் உதவக்கூடாது என்று இவர் தடை செய்தனர். அகநானூற்றை ஐயர் தாமே பதிப்பிடக் கருதியிருந்தனர். ஒருவேளை, இக்கருத்து இவரைக் கடுமையுள்ளத்தராகச் செய்திருக்கலாம். எனினும் இவ்வகையான மனப்பான்மைகள் ஐயருக்கு இருந்தமை தமிழ் மக்களது துர்பாக்கியமே.

+++

நம்மிடையே இருக்கும் திறன் மிக்க பார்ப்பனரல்லாத இலக்கிய விமர்சகர்களும், வரலாற்று ஆய்வாளர்களும் நூறாண்டு கடந்த பின்னரும், தேசியவாதிகளின் சத்சங்கத்தில் இணைந்து, உ.வே.சா. புகழ்பாடும் பன்னிசைத்து கொண்டிருப்பதால், விமர்சனப் பார்வையுடைய எவரும், எஸ். வையாபுரிப் பிள்ளை என்ன கூறியுள்ளார் என்பதை அறிந்துகொள்வது நல்லது. இத்தோடு நிற்காமல் முன்சென்று, தமிழ் நூல் பதிப்பு வரலாற்றையும் பதிப்பு முறைகளையும் ஆழமாகச் சிந்திப்பதற்கும் நிறைய விசயங்கள் உள்ளன.

Leave a comment