இருபத்தி நான்காம் வயதில் பாரதி – ஜோதிகுமார் –

 – ஜோதிகுமார் – ஜோதிகுமார் 21 ஜூலை 2024

1

ஆன்ம உணர்த்திறன்

மனிதனது இதய தாபங்கள் அனைதையும் சரியாக உள்வாங்கி, அவற்றை நல்ல முறையில் எதிரொலிக்கக் கூடியதாக, தன் ஆன்மாவை நுண் உணர்வுமிக்கதாய் மாற்றி அமைத்துக்கொள்ள உண்மைக் கலைஞன் வேண்டப்படுகின்றான். ஆனால், இத்தகைய ஆன்மாவை வடிவமைப்பதென்பதும், அதனைத் தக்கவைத்துக்கொள்வது என்பதும் கடின செய்கையே.

மனுக்குலத்தின் மீது அவன் கொள்ளும் பேரன்பு சமூகநீதிக் கோரி, அவனைச் சமரசம் இன்றி தேடலுக்கு உட்படுத்தி, அவனுக்கு ஆன்மப் பக்குவத்தை அளிக்கக்கூடும். இருந்தும் இந்நகர்வில், அவனுக்கு ஏற்படக்கூடிய இன்னல்கள் – அவன் தரக்கூடிய விலை, அவன் எதிர்க்கொள்ளவேண்டிய துன்பங்கள் – இவையனைத்தும் உடன் நிகழ்வதே ஆகும்.

சுருங்கச் சொன்னால், இப்பயணிப்பின் போது அவன் சுமக்க முனையும் சுமையின் எடை அசாதாரணமானது எனக் கூறலாம். இத்தகைய ஓர் சமன்பாட்டில்தான், பாரதி எனும் இவ் இருபத்து நான்கு வயது இளைஞன், ஏற்கனவே வகுத்தளிக்கப்பட்ட, கறாரான திட்டங்கள் ஏதுமின்றி இச்சுமையைத் தூக்க சம்மதிக்கின்றான்.

இக்காலப்பகுதியில், இவ்இளைஞன், தன் ஆன்மாவைக் கட்டியெழுப்பும் விதம் எமது கவனத்துக்குரியது. பல் கூறுகளாய் அமையக்கூடிய அவனது தேடல்களின், ஒரு கூறு கடவுள் சம்பந்தமானது.

ஒருசந்தர்ப்பத்தில் மகா கலைஞன், மக்சிம் கார்க்கி கூறுவான்: “உனது கடவுள் யார் என்ற கேள்விக்கு நேர்மைமிக்க எந்த மனிதனும் விடையளிப்பது சற்றுச் சிரமமானதே (1898).

பாரதி பொருத்து, ஆழ ஆய்வு செய்யும், பேராசிரியர் கைலாசபதி கூறுவார் : “இவன் ஒரு சாக்த பக்தன்” என.

ஆக, 24 வயது பாரதியின் கடவுள் யார் என்ற கேள்வி ஒரு பரபரப்பான கேள்வியாக உருக்கொள்ளக்கூடியதுதான். தன் ஆன்மாவைக் கட்டுவிக்க அல்லது நிலை நிறுத்த அல்லது தாங்கிக்கொள்ள இவன் எதை எதைக் கருத்தில் கொள்கின்றான் – தன் கடவுளை எப்படி இவன் தேடிக்கொள்கின்றான் என்பதெல்லாம் சிந்தைக்குரிய கேள்விகளே ஆகும். (கடவுளும் மதமும் வேறு வேறு எனில்).

2

விவேகானந்தரும் மத நிமிர்வும்

விவேகானந்தரின் ஆளுமைப்பொறுத்து இவ் இருபத்து நான்கு வயது இளைஞனின் வியாசமொன்றின் ஆரம்பப் பகுதியில், பின்வருமாறு கூறப்படுகின்றது : “தன்நலம் பாராட்டல், ஆசை, அச்சம் எனும் குணங்கள் செறிந்த உலக மாயை என்ற பாறைக்குட்பட்டிருக்கும் தேரையாகிய நான்… தெரிந்தமட்டிலேயே விவேகானந்த சுடரின் பெருமையைச் சிறிது பேசத்தொடங்குகின்றேன்…” (பக்கம் 178).

பிற்பட்ட காலத்தில், “உலக மாயை” என்ற கருத்தோட்டம் குறித்து தத்துவ அடிப்படையில் தன் வீச்சை இவன் எடுத்தியம்பும் போது, மேற்பட்ட கருத்தோட்டத்தை இவன் எதிர்கொள்ளும் விதமும் அதற்கெதிராய் செயல்பட்ட பண்பும் வேறுபட்டது.

இருந்தும், விவேகானந்தரின் வாழ்வு – பார்வை பொருத்த தகவல்களை, இக்கட்டுரையில் பாரதி என்ற இவ்இளைஞன் கூறிநிற்கும் போது, இவ்இளைஞனின் வாழ்வுப்பொறுத்த எண்ணப்பாடுகளும் பார்வைகளும் கூடவே வெளிப்படுவதாய் உள்ளன – இத்தகவல்கள் போன்றே!

18ம் வயதில் நரேந்திரர் (விவேகானந்தர்) பி.ஏ பரீட்சை தேறினார். 12 வயதான உடனே நரேந்திரர் கடவுளர் அநேகர் என்ற கொள்கையை நம்பாமல் நிறுத்திவிட்டார். பிரம்ம ஸமாஜத்தார் ஈசனைப்பற்றி கொண்டிருக்கும் கோட்பாடே தகுதியானதென்று நம்பத்தொடங்கினார்… ஆனால் சிறிதுக்காலத்திற்கு அப்பால் இவருக்கு பிரம்மஸமாஜத்திலேயே இருந்த பற்று நீங்கிவிட்டது” (பக்கம் – 181).

ஸ்ர்வாந்தர்யாமியாகிய பிரமத்தைப் பிரத்தியக்ஷ்மாக அனுபவிக்க வேண்டும் என்ற ஆவல் நரேந்திரருக்கு ஏற்பட்டது. பிரம ஸமாஜத்தார் ஏதோ சில ஐதீகங்களை வைத்துக்கொண்டு பழைய பிரார்த்தனைகளையும் ஜெபங்களையும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது ஸ்வாமிக்கு இசையவில்லை”. “நேரே பிரத்தியக்ஷ்மாக அனுபவிக்கப்படாத பிரமத்தினிடத்திலே பக்தி வைப்ப தெங்ஙனம்? எனக்குத் தெரியாத ஒரு பொருளின் மீது நான் எவ்வாறு அன்பு செலுத்த வல்லேன்? இந்த சமயத்தில் “ஸ்வாமிகள் நிரீசுரவாதியாகி விட்டனர்” (அழுத்தம் எம்முடையது).

இந்த ஜகத்திலே ‘பிரமத்தை யொழிய வேறொன்றுமில்லை’ யென்ற பெருங்கொள்கையை உலகத்தாருக்கு எடுத்துப்போதனை செய்யவந்த இம்மஹான், இந்த ஜகத்திலே ‘தெய்வமே கிடையாது’ என்ற கொள்கையைச் சிறிது காலம் வைத்திருந்தார். ஆனால், இக்கொள்கை சொற்ப காலத்திற்கப்பால் நீங்கிப்போய்விட்டது.” (பக்கம் 182).

மேற்படி கூற்றுக்களின் முதல் முக்கியத்துவம், இவ் இளைஞன் தான் கூறவரும் விடயம் சார்ந்த தகவல்களை, முழுமையாகத் திரட்டி, ஒன்று சேர்த்து, அவற்றைக் கற்று தேரும் பண்பு கொண்டவனாக இருக்கின்றான் என்பது நாம் உடனேயே அவதானிக்கக்கூடியதாக இருக்கின்றது.

மற்றும், “பெரும் கொள்கை” என இவன் “பிரமத்தை” வர்ணிக்க முற்படுவது இவன் அன்று கொண்டிருந்திருக்கக்கூடிய நம்பிக்கையை எடுத்தியம்புவதாக உள்ளது. (பல கடவுளாரின் இருப்புக்களை நிராகரித்து).

இந்த ஜகத்தில் பிரமத்தை ஒழிய வேறொன்றுமில்லை என்ற பெரும் கொள்கையை உலகத்தாருக்குப் போதனை செய்ய வந்த இம்மகான்…” என இவ்இளைஞன் கூறும் போது ஏனைய மதக்கொள்கைகளை இவ்இளவயதிலேயே கற்று தேர்ந்து, தனது ஆழ்ந்த பரிசீலனைக்கு எடுத்துள்ளான் இவன் என்பது தெளிவாகின்றது.

விவேகானந்தரின், வாழ்க்கை தரிசனம் குறித்து பின்வருமாறு கூறுகின்றான், இவ்இளைஞன்: “பிரம கள்ளுண்டு… பல இடங்களில் யாத்திரை புரிந்து… இமயமலைக்கு சென்று… வாழ்ந்து… இதற்கப்பால் லேகோபாகாரம் செய்ய வேண்டும் எனத் திருவருள் இவருக்கு உண்டாகிவிட்டது… இந்திய தேசத்தில் ஆண்களெல்லாம்… சரீர பலம், மனோ பலம், ஞான பலம் என்ற மூன்றுமல்லாது அற்ப வாழ்க்கையை வாழ்கின்றார்கள்… அதன் பேரில் இமயமலை சாரலில் இருந்து இந்த மகாரிஷி இறங்கி வந்து… பல இடங்களில் சுற்றிவிட்டு…  சென்னை வந்து சேர்ந்தார்…”

அதாவது பிரம கள்ளுண்டு, இமயமலை சாரல்களில் தவம் புரிந்த இம்மகாரிஷியானவர், இப்படி இறங்கிவந்து நலிந்துப்போய்கிடக்கும் இந்திய மக்களை நிமிர்த்தும் பொருட்டு  சென்னைக்கு வந்து சேர்வது இவ்இளைஞனுக்கு ஏற்புடையதாகின்றது.

இங்கே, இரு விடயங்கள் தெளிவாகின்றன :

ஒன்று, இவ்இளைஞன் பயணித்திருக்கக் கூடிய பல்வேறு மதமார்க்கங்கள் – நம்பிக்கைகள் (பிரமசமாஜம் உட்பட). பின் அந்த பழைய பிரார்த்தனைகளையும் ஜெபங்களையும் வெறுமனே மனனம் செய்து, சொல்வதென்பது உபயோகமற்றது என உணர்ந்து அவன் பிரமத்தை வந்துசேரும் முடிவு.

இது, அவன், அக்காலப்பகுதியில், தன் கடவுளை எங்கெங்கு தேடி அலைகின்றான் எனக் கூறும் அதேவேளை, அது மலையடிவாரத்தில் தனித்து தவங்களில் ஈடுபடுவதாய் இருக்கக் கூடாது – அது இறங்கிவந்து மக்களுடன் இரண்டர ஒன்று கலந்துவிட வேண்டும் என்ற எண்ணத்துடிப்பே இவ்இளைஞனில் முனைப்பாகத் தட்டுப்படுவதாகத் தென்படுகின்றது.

வேறுவார்த்தையில் கூறினால், இக்காலப்பகுதியில், இவ்இளைஞனின் கடவுள் யார் என்ற கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக, இவனது விவேகானந்தர் குறித்த வியாசம் அமைந்து போகின்றது.

அதாவது, விவேகானந்தர்பால் தான் ஈர்க்கப்படும் காரணங்களாக இரண்டைக் கூறத்துணிகின்றான் இவ்இளைஞன். ஒன்று, பல்கடவுள்கள் இருப்பதை நிராகரித்து, “பிரமம்” என்பதில் வாசம் செய்யும் இவனது அவா. இரண்டாவது, அந்த பிரமமானது, மக்களுடன் வந்து இணைந்து சேவையாற்ற வேண்டும் என இவன் சிந்தித்து தெளியும் பண்பு.

இவை இரண்டும், இவ்இளைஞனின், அதாவது, இவ்இளைஞனின், இருபத்து மூன்று-இருபத்து நான்கு வயது காலப்பகுதியிலேயே நடந்தேறுவது விசேடமானது.

ஆனால், விவேகானந்தரின் மேற்படி “அறிமுகத்துக்கு” முன்னரே, இவ்இளைஞனின், மதம் சம்பந்தமான எண்ணக்கருக்கள், ஏற்கனவே முளைவிட்டிருக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கக்கூடும், என்பதை நாம் அனுமானிக்கலாம்.

தனது விவேகானந்தர் கட்டுரைக்கு முன்பாக இவ்இளைஞன் மலையாள நம்பூதிரிகளுக்கிடையிலான சீர்திருத்தம் குறித்து பின்வருமாறு எழுதுகின்றான் : “ஞானமற்ற, முரட்டுத்தனமான, மூடப்பக்தி பிடிவாதத்திற்கு நம்பூதிரி கூட்டத்தினரே முக்கிய பிரதிநிதிகளாக இருக்கின்றார்கள்” (பெப்ரவரி 1906 : பக்கம் 171).

(நம்பூதிரிகளில் ஒருவரான கேரளா மாக்சியவாதியாக அறியப்படும், நம்பூதிரிபாத்தின் பாத்திரமும், இவ்வகையில், ஒப்புநோக்கத்தக்கது என்பது வேறு விடயம்).

இங்கே, இவ் இளைஞனின் மதம் பொறுத்த தேடலுடன், சமூகத்தில், மதம் பொறுத்த தேடலுக்கான கீற்றும் தென்படுகின்றது.

பாரதி, என்ற இவ் இளைஞன், “ஞானமற்ற” “முரட்டுத்தனமான” “மூடப்பக்தி” என்று சொல்வதற்கூடு எதனை இனங்கண்டு கொள்கின்றான் என்பது கேள்வியாகின்றது.

மார்க்ஸ் குறிப்பிட்ட, அதே களிம்பு தட்டிப்போன, இந்து மதத்தின் சாரத்தையா இவன் குறிக்கத் துணிகின்றான் என்பது விடயம்.

இமயமலை சாரலில் இருந்து இறங்கிவரும் விவேகானந்தர் கூட மனிதன், ஆண்மை இழந்து, பேடிகளின் கூட்டமாக இருப்பது கண்டு நெஞ்சு வாடுகின்றார். அன்றைய இந்தியாவில், இருந்திருக்கக்கூடிய, மதம்-கலாசாரம்-பண்பாடு என்பன அனைத்துமே முற்றாய் மாற்றியமைக்கப்பட வேண்டிய தேவையை, என அவர் உணர்ந்திருக்கலாம். விவேகானந்தரின் பார்வையில் இக்கலாசாரம்-பண்பாடு-நம்பிக்கை என்பன பிரதியீடு செய்யப்பட்டாக வேண்டும் என அவாவுறுவது வேறுவிடயம். ஆனால், இதன் போது, மதங்களுக்கான புதிய பொருட்கோடல் இங்கு ஆரம்பமாகிறது, என்பதே முக்கிய கருப்பொருளாகின்றது.

இப்பின்னணியில், பாரதி முயன்றது எதனை என்பது கேள்வியாகின்றது. இருவருமே மனிதனை மாத்திரமன்றி, அதனது அடித்தளமாய் அன்று இருந்திருக்கக்கூடிய, மதத்தினையும் நிமிர்த்த முற்படுகின்றார்கள் எனக் கூறுவதே பொருத்தமானது.

3

மாதர் கோரிக்கைகள்

இதனைப் போலவே, மாதர் தொடர்பிலான பாரதியின் சிந்தனையிலும், உக்கிரம் தாண்டவம் ஆடுவதை, இக்காலப்பகுதியில், நாம் காணக்கூடியதாக உள்ளது.

பஞ்சாபியிலுள்ள மாரிப்பூர் என்ற ஊரில், 1905களில் நடந்தேறிய, சதி தகனம் பற்றிய வழக்கு தொடர்பிலான விசாரனைக்குறிப்பை, அவன் மார்ச் 1906ல், சக்கரவர்த்தினியில் எழுதும்போது பின்வருமாறு எழுதுகின்றான் :

“…அவள் முகத்திலே துணி ஒன்றைக் கொண்டு மூடினதின் பேரில் அவளது கழுத்துவரை வரட்டிகளை அடுக்கி, நெருப்பைக் கொளுத்திவிட்டு, அந்நெருப்பிலே மூடபக்தி கொண்ட மகாபாதக மிருக ஜனங்கள், எண்ணெய், நெய் முதலியவற்றைக் கொண்டு சொரிந்தார்கள்… மத்தளங்கள் அடித்தும், ராம் ராம் என்று கூக்குரலிட்டும் அவளது அழுகை குரல் வெளியே கேளாதப்படித் தடுத்துவிட… (அவள்)… சிறிது நேரத்துக்கெல்லாம் சாம்பராகிவிட்டாள்…” (பக்கம் :192).

இவ்வரிகளில், காணக்கிட்டும் “மூடபக்தி கொண்ட மகாபாதக மிருக ஜனங்களும், ராம் ராம்” என அவர்கள் கூக்குரலிடுவதும், அவனது சிந்தனையின் உக்கிரத்தை மாத்திரமல்ல – ஆனால் ராம், ராம் என்ற வார்த்தைப் பிரயோகத்தின் உண்மை வேர்களையும், அவனுக்குக் காட்டுவதாயுள்ளது. வழக்கை மேன் முறையீடு செய்துள்ள பாதகர்கள் குறித்து குமுறுவான் :

அந்த ஸ்தலத்திற்கு வருமளவும் ஸதி தகனம் நடக்கும் என்பது, தமக்குத் தெரியாதென அப்பிலிலே சொல்கின்றார்கள்…”

பந்து மிருகங்கள் என்ன பொய் கொண்டு வந்திருக்கின்றனவோ அறியோம்…”

“20 வயது கன்னிகையை ஆவலுடன் கொளுத்தி பாத்துவிட்டு, தமது நீச உயிர்களுக்கு, கஷ்டம் வரும்போது பொய் ஓலமிடுகின்ற இந்த ஈனர்களை கோட்டார் இலேசாக விடமாட்டார்களென்று நம்புகின்றோம்…” (பக்கம்:192).

மாதரின் இந்நிலைக்குறித்து, அக்கினி குழம்பாய், குமுறும் பாரதியை, இவ்இளைஞனில் காண்கின்றோம். ஆனால் அவனது கோபக்குரல் மாத்திரமே இங்கே முக்கியத்துவப்படுவதாயில்லை. அன்றைய இந்தியாவின், இறுகிப்போய்கிடந்த மத நிலைமையினையும், இவ்வரிகள் வெளிக்கொணர்வதாகவே அமைகின்றது. (இதனையே அன்றைய ஆங்கில அமைப்பு, எப்படி தகர்க்கப்போகின்றது என்பது இணைந்த, வேறு விடயம்.)

4

நிவேதிதாவின் சந்திப்பு

1905இன் இறுதியில், நடந்தேறியதாய் கூறப்படும் நிவேதித்தாவின் சந்திப்பு, இவ்இளைஞனின்  எழுத்துக்களில் தீவிரம் காட்ட செய்திருக்கக் கூடும் எனவும் நம்பப்படுகின்றது. ஆனால் இத்தகைய ஒரு சந்திப்பு நிகழாதிருப்பினும் கூட,  மாதர் பொறுத்து, இவன் இவற்றை எழுதக்கூடியவன்தான் என்பது, இச்சந்திப்புக்கு முன் எழுதப்பட்ட “துளசிபாய்” என்ற கதையின் மூலம் தெளிவுறுத்தப்படுகின்றது. (நவம்பர் 1905). துளசிபாயி கதையும் ‘ஸதி தகனம்’ எனும் விடயத்தை, தொடுவதாயுள்ளது. அங்கே, பெண்ணை – இளம் நங்கையை – ரோஹினி நதிகரையில், மயானத்தில் எரிக்கப்போகின்றார்கள். இதை தடுக்கும் பொருட்டு, இதற்காகக் குழுமியிருக்கும் ஒரு ராஜபுத்திர கூட்டத்தை நெருங்குகிறான், ஒரு, மகமதிய போர் வீரன்.

பாரதி, இம்மகமதிய வீரனுக்கூடு கூறுகிறான் :

பிராமணர்களை பற்றிய பயம் கிடையாது… கண்டவுடன் ஓடி விடுவார்கள்…”

மேலும், ராஜபுத்திர வீரம் குறித்து, ஏளனத்துடன் கூறுகின்றான் :

ராஜபுத்திரர்களின்… வீர ரத்தம் பொங்குகிறது… விழிகள் சிவந்தன… மதக் கிரியைகள் நடக்கும் இடத்தில்… ஏனையா… நிற்கின்றீர்..”

இதற்கு, அக்பரின் ஆட்சி முறைமையில், இத்தகைய ஸதி தகனங்கள் நடைபெறக் கூடாது, தடுக்கப்பட்டு விட்டனவே

என்ற மகமதிய வீரனின் கூற்றுக்கு, குழுமியிருக்கும் ராஜபுத்திரர்கள் பதிலாகக் கூறுவது :

“நீ யாரடா மகமதியன்.. பாரத பூமிக்கு மிலேச்சனடா அரசன்…”

புரோகித பிராமணர்கள் ஓடிவிடுகின்றார்கள். பெரும் வாள்வெட்டு இடம் பெறுகின்றது. துளசிபாய் காப்பாற்றப்படுகிறாள் – இது துளசிபாய் கதையில் இடம்பெறும் சம்பவங்கள்.

அன்றைய இந்தியாவில் காணப்பட்ட, இவ்வகையான கொடூர ஜனங்களும், அவர்களுக்கு அடித்தளமாய் அமையும், அற்ப சமூக அமைப்பும் இங்கே விவரிக்கப்படுகின்றது என்பதும், இது, ஆங்கிலேய செயற்பாடுகளால் எப்படி தகர்க்கப்படக் கூடியதாக உள்ளது என்பதுமே கேள்வியாகின்றது, இப்புள்ளியிலேயே ஒரு  “புதிய வித்து” முகிழ்க்கவும்கூடும் என்றும் கார்ல்மார்க்ஸ் கருதிய கூற்றின் முக்கியத்துவம் வந்து சேர்கின்றது. மதம் பொறுத்தும், மக்கள் பொறுத்தும், விவேகானந்தர் பொறுத்தும், ஸதி தகனம் பொறுத்தும், தன் எழுத்துக்களையும், தன்னையும் அர்பணிக்கத் துணியும், இவ், 24 வயதும் அரும்பாத இளைஞன், யார்? மார்க்ஸ் குறிப்பிட்ட அப்புதிய வித்தின் ஒரு கீற்றா என்பதே இங்கே எழக்கூடிய கேள்வியாகின்றது.

(வணக்கத்துடன் : காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் – தொகுப்பு 1 : சீனி. விசுவநாதன் – பக்கங்கள் : 200 வரைக்கும்)

lux.jothikumar@gmail.com

பாரதியார் ஓவியம்: நன்றி இந்து தமிழ்

இருபத்தி நான்காம் வயதில் பாரதி : பகுதி II – ஜோதிகுமார் –

 – ஜோதிகுமார் – ஜோதிகுமார் 30 ஜூலை 2024

 அச்சிடுக 



01

பாரதியின் எழுத்துக்களில், மூன்று முரண்களை நாம் அடையாளப்படுத்தலாம்:

ஒன்று, அவனது ஆன்மாவில் (அல்லது சிந்தையில்) தட்டுப்படக்கூடிய முரண். இரண்டாவது, அவனது அரசியலில் காணக்கிட்டும் முரண். மூன்றாவது, அவன் தன் எழுத்தை ஓர் வாகனமாக வடிவமைக்கும்போது அங்கே எழக்கூடிய முரண். இம்முரண்கள் ஒவ்வொன்றும், தனித்தனி உதாரணங்களோடு அவனது வாழ்க்கை நகர்வுகளுக்கு ஏற்ப வாதிக்கப்படுவது விரும்பத்தக்கது. இதன் காரணத்தினாலேயே, இக்கட்டுரைத் தொடரின் முடிவுகளும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட முடியாதவையாகின்றன.

இதனால், பாரதியைக் கற்கும் இத்தகையவொரு செயற்பாட்டில், அவனது வளர்ச்சிக்கேற்ப, இக்கட்டுரைத் தொடரின் இறுதி முடிவுகள், மாற்றமுறலாம் என்பதனை ஆரம்பத்திலேயே கூறிவைக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

02

பாரதி என்ற இளைஞன், தன் 24ஆம் வயதிலேயே, மனித வாழ்வு பொறுத்தும், மரணம் பொறுத்தும், சிந்தித்துத் தெளிய முற்பட்டிருப்பது குறிக்கத்தக்கதாகின்றது. இதன்போது, இவ் இளைஞன் கூறுவான்: “உலக வாழ்க்கை மிகவும் நம்பத்தகாததாக இருக்கின்றது. எந்த நிமிசத்திலே மரணம் சம்பவிக்குமோ அல்லது எந்த நிமிசத்திலே நீக்க முடியாத நோய் வந்து சேருமோ (என்பதனை) நம்மால் நிச்சயித்துக் கூற இடமில்லை… பெரும்பாலர் துன்பக்கடலில் மிதந்து கொண்டே செல்லுகிறார்கள்… எத்தனைப் புயற் காற்றுகள்! எத்தனைச் சுழிகள்! எத்தனைப் பாறைகள்! நடுவே… சில சில இன்பத் தீவுகள்… மறுபடியும் அலைகள், சுழிகள், பாறைகள், புயற் காற்றுகள்… மிக மிகச் சில ஆறுதல்கள்…” (பக்கம் -235, ஜுலை 1906 : சக்கரவர்த்தி)

தனது, 24 வயதில் வாழ்வை ஒரு சுற்று சுற்றிப் பார்க்கும் இவ் இளைஞன், வாழ்வின் சாரத்தைக் கணிக்கத் தெண்டிப்பது தெரிகின்றது. இதன்போது, ஒருபுறம் வாழ்வினையும் மறுபுறம் சமூகத்தினையும், தன்னிலிருந்து மெதுவாக விடிவித்தவாறே, இக்கேள்விகளை ஒப்பீட்டளவில் அந்நியப்படுத்தி மேற்படி அம்சங்களைத் தனித்தனியாகக் கையாளும் இவனது பக்குவத்தை, அதிலும், இவ் இளவயதில் இவன் வளர்த்துக்கொள்ள ஆரம்பிப்பது தெரிகிறது.

வாழ்வு குறித்த இவனது கூற்றான “ஆறுதல்கள்” அல்லது “சில சில இன்பத் தீவுகள்” குறித்து மேலும் கூறுகின்றான்: “அவற்றுள்ளே காதலும் ஒன்றாகும். மறுநாள் காலையிலே, தூக்குண்டு சாகப்போகிற மனிதன், இன்று மாலை சிறைக் கதவிற்கு வெளியே தனது ஆசை காதலி வந்து நிற்கக் காண்பானாயின், கம்பிகள் மூலமாக அவளுடன் முத்தமிடுமொரு கணம் மட்டும், தனது துன்ப நிலையெல்லாம் மறந்து பரவசமாகி விடுகின்றான்…” (பக்கம் 235 : ஜுலை 1906)

காதலை போற்றும் வரிகள் இவை.

கார்கியும், கிட்டத்தட்ட, தனது “ஒரே முத்தம்” என்ற சிறுகதையில் ஓர் ஆன்ம முத்தத்தின் சாரத்தை எடுத்துரைப்பார். உலக சுமையைச் சுமப்பதற்கு இரண்டு ஆத்மாக்கள் அல்லது ஜீவன்கள் ஒன்றிணைவது என்பது ஒரு புறமிருக்க, இவ் உறவானது சிறப்பான, விதிவிலக்கான ஓர் உறவு என்ற ரீதியிலும் முக்கியத்துவப்படவே செய்கின்றது.

மேற்படி பந்தியில் முக்கியப்படும் விடயங்கள் இரண்டு. ஒன்று, “வாழ்க்கையின் சாரம்” பொறுத்த இவ் இளைஞனின் பார்வை. மற்றது, “சிறை” பொறுத்த இவ் இளைஞனின் பிரஸ்தாபிப்பு. அதாவது “மரணம்” என்பதனையும் “காதல்” என்பதனையும் ஒரு கணம் நாம் மறப்போமெனில் “சிறை” என்பது குறித்த சொல்லாடல் அவனது ஆழ்மனதில் கிடக்கக்கூடும் என்றாகின்றது. அல்லது அவன் தனது முழு பிரக்ஞையுடனேயே “சிறை” என்ற வார்த்தையைத் தேர்ந்து எழுதியிருக்கவும் வாய்ப்புண்டு. ஆனால் “காதலைப்” பற்றி கதைக்க வருமிடத்து “சிறையைப்” பற்றிய பிரஸ்தாபம் ஏன் என்பது கேள்வியாகின்றது.

காரணம், இவ்வியாசத்தினைப் பாரதி எழுதும் போது (1906 ஜுலை) சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான, அந்தமான் செலூலர் ஜெயில் கட்டி முடிக்கப்பட்டதாகின்றது (1896-1906). இக்காலப்பகுதியில், பல்வேறு இந்திய தீவிரவாத இளைஞர்கள், சுதந்திரப் போராட்டம் என்ற யாகத்தீயில் குதித்து சங்கமிக்கச் சம்மதம் கொள்கிறார்கள். வேறு வார்த்தையில் கூறினால், இந்திய சுதந்திரப் போர், தன் தீ சுவாலையை வீசி எரிய ஆரம்பித்துள்ள இவ்வேளையில், “காதலைப்” பற்றி கதைக்கவரும் இவ் இளைஞன், அத்தீயிலிருந்து அந்நியப்படாமல், அதன் முளைகளை, தன்  எழுத்துக்களில் தேக்கித் தர முற்படுகின்றான் – பிரக்ஞையுடனோ பிரக்ஞையற்றோ. வேறு வார்த்தையில் கூறுவதானால் “சிறை” பொறுத்த அவனது பிம்பம், அவன் அறியாமலேயே அவனது மனக் கதவைத் தட்டுவதாகவும் இருக்கலாம்.

வாழ்வின் சுழிகளுக்கு மத்தியில் “காதல்” என்ற இந்த இன்பத்தீவின் இருப்பைக் காண்கின்ற இவ் இளைஞனின் பார்வை, இப்படியாக தன் வாழ்நாள் முழுவதும் அரசியலுடன் பின்னிப்பிணைவது, இவனது இயல்பாகின்றது.

செலூலர் ஜெயிலின் கட்டமைப்பானது, அன்றைய ஆங்கிலேயரின் ஆட்சி முறைமையை, விபரிக்கும் ஓர் உதாரணமாகின்றது.

மிக மிக நுணுக்கமாகத் திட்டமிட்ட ரீதியில் ஆங்கிலேயரினால் கட்டப்படும் இந்த ஜெயிலின் ஒவ்வொரு அம்சமும் முன்கூட்டி யோசிக்கப்பட்டதே. (பொதுவில், ஆதிக்கச் சக்திகளின் ஒவ்வொரு நகர்வுகளுமே நுண் அரசியல் திட்டங்களுடன், முன்கூட்டி ஆழ சிந்திக்கப்பட்டு அமுல்படுத்தப்படுவது என்பதனைக் கூறியே ஆகவேண்டும்.)

குறித்த செலூலர் ஜெயிலில், தூக்கு மேடைகளுக்கு எதிர்த்தாற்போல் அமைந்திருக்கக்கூடிய கைதிகளுக்கான சமையலறையானது இரு பிரிவுகளைக் கொண்டதாக விரிகின்றது. ஒன்று, இந்துக்களுக்கான உணவைத் தயாரிக்கும் சமையல் பகுதி. மற்றது, இஸ்லாமியரின் உணவினைத் தயாரிக்கும் மற்றொரு பகுதி.

இவ்விதம் இருவேறு மத குழுக்களுக்கிடையே, நிலவக்கூடிய வேறுபாடுகளை, தூபமிட்டு வளர்க்கும் இச்செய்முறையை, சிறையிலும், ஆங்கிலேயர் பின்பற்றுகின்றனர். (மலையகத்தில், பெருந்தோட்ட மக்கள் குடியேற்றப்பட்ட வேளை, அவர்களின் வாழ்விடம் (லயன்கள்) சாதி ரீதியாகவே ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டதென்ற உண்மையையும் இப்பின்னணியில் மனம் கொள்ளத்தக்கது.)

ஆக, தூக்கு மேடை, உணவு தயாரிக்குமிடம், சுதந்திரப் போர்க் கைதிகள் இவற்றுடன் செக்கு இழுப்பதை நிர்ப்பந்திக்கும் சாட்டை அடிகள் – இவற்றையும் சேர்த்துக் கொண்டால், ஆங்கிலேய அரசாட்சியின் நுணுக்க விபரங்களை அறியலாம் என்றாகின்றது. இச்சூழலிலேயே, 1905 பெப்ரவரியில், வங்கதேசம் பிரிபடுவதற்கான ஆலோசனையும் ஆங்கிலேயரால் முன்வைக்கப்படுகின்றது. இஸ்லாமிய மாகாணம், இந்து மாகாணம் என்ற மத அடிப்படையில் பிரிபடும் இவ்வங்க மாகாணம், இப்பிரிபடலூடாக இந்திய அரசியலை ஒட்டுமொத்தமாக மாற்றுவதாக இருக்குமென, ஆங்கிலேயரால் திட்டமிட்டு, மிக நுணுக்கமாக அரங்கேற்றப்படுகின்றது.

இந்நச்சுணர்வு (பிரித்தாளும் தந்திரம்) விதைக்கப்படுமாயின், முளைவிட தொடங்கியிருக்கும் தேசிய உணர்வினை இது முற்றாகச் சிதைத்து அப்புறப்படுத்தி விடக்கூடும் என்று ஆங்கிலேயரால் நம்பப்படுகின்றது. (இன்றுவரை, ஆதிக்கச் சக்திகள், இப்படியான பிரித்தாளும் தந்திரத்தைக் கைவிட்டாரில்லை என்பது வேறு விடயம்.)

ஆனால் மகா கலைஞர்கள், இவ் அபாயங்களை ஊடுருவி உள்வாங்குபவர்கள். இவற்றுக்கு எதிராக எதிர் வினையாற்றுவதும் நடந்தேறாமல் இல்லை. உதாரணமாக, கார்கியின் எழுத்துக்களில், வளர்ந்து வரும் ரஷ்ய புரட்சியைத் தடம்புரள செய்வதற்காக, யூத எதிர்ப்பு செயற்பாடுகளை நுணுக்கமாகக் கையாளும் ரஷ்ய ஜார், யூதருக்கு எதிரான இனவாதத்தை வீதிகளில் வீசி எறியும்போது, அதனைக் கார்கி போன்ற மகா கலைஞர்கள் சடுதியாக உள்வாங்கி எதிர்வினையாற்றத் தவறவில்லை என்பதைக் கூறியாக வேண்டும்.

இதனைப் போலவே பாரதி எனும் இவ் இளைஞனின் எழுத்துக்களும் இவ் அபாயங்களை முன்கூட்டியே எச்சரித்து சுட்டுவதாக உள்ளது.

ஜுலை 1906 இல், Lord Curzon இன் உரை குறித்துப் பாரதி எழுதும் வியாசமானது இவ்வகையில் ஆங்கிலேய அணுகுமுறை குறித்த எச்சரிக்கையை விடுப்பதாக உள்ளது.

ஒக்ஸ்போர்ட்டில் கல்வி கற்றவரும், பின்நாட்களில், ஒக்ஸ்போர்ட் பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டவருமான, அரச குடும்பத்தைச் சேர்ந்த இந்தியாவின் வைஸ்ராய் Lord Curzon தனது வங்கதேச திட்டத்தை முன் வைத்ததன் பின்னர், கல்கத்தா பல்கலைகழகத்து பட்டமளிப்பு விழாவில், இந்து மதத் துவேசிப்பை விதைத்து புதிய அரசியலை, ஆழமாகக் களமிறக்குவதைக் காணலாம்.

பதிப்பாசிரியர் சீனி. விசுவநாதன் அவர்கள் பின்வருமாறு கூறுவார்: “1905 ஆம் ஆண்டு பெப்ரவரி 4ஆம் திகதி லார்ட் கார்சன், கல்கத்தா சர்வ கலாசாலை பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு இந்தியர்களை மிகவும் தூசணை செய்து வரையறையின்றி திட்டியும், அவமானப்படுத்தியும், பேசினார்.” (பக்கம் 259)

பாரதி எழுதுவான்: “கல்கத்தா யுனிவர்ஸிட்டியில் பட்டம் பெறும் இவர்களின் முன்பு லார்ட் கார்சன் செய்த உபந்நியாசத்தில் ஹிந்துக்களைப் பற்றியும் அவர்களது புராதன கிரந்தங்களைப் பற்றியும் கூறிய பழிச்சொல் நம்மவர்கள் மனதிலிருந்து ஒரு பொழுதும் நீங்க மாட்டாது…” (பக்கம் 249)

பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் உத்தியோகம் பார்ப்போன்… நீசனாய் இருக்க வேன்டுமென்று (இவர்) நிச்சயித்து கொண்டிருக்கின்றார்…” (பக்கம் 250)

“(அதாவது) வெளியில் சொல்வதற்கு ஒரு அபிப்பிராயமும், மனதுக்குள்ளே மற்ற அபிப்பிராயமும் வைத்துக் கொண்டிருக்கின்றார். (லார்ட் கார்சன்)”

“இப்படி கொள்கை வைத்திருந்த இந்த மனிதன் (லார்ட் கார்சன்) இஷ்டப்படி ஆளும்படியாய், முப்பது கோடி ஜனங்கள் இவருக்கு கீழே வைக்கப்பட்டிருந்தார்கள் என்பதை நினைக்கும் பொழுதே மனம் பதறுகின்றது.” (பக்கம் 250)

இவ்வரிகளில் இருந்து தெரிய வருவது, 1905 இல், ஆங்கிலேய ஆட்சியாளர்கள், ஒரு திட்டமிட்ட ரீதியில், செலூலர் ஜெயிலைக் கட்டிவைப்பது மாத்திரமல்ல, வங்கதேசத்து மாகாணத்தை மத அடிப்படையில் பிரித்து வைப்பது மாத்திரமல்ல, ஆனால், வளர்ந்து வரும் ஒரு தேசிய அரசியலின் அடித்தளத்தில், இந்து மதத்தை அங்கே இரகசியமாக புதைத்து விட எத்தணிப்பதே, இவர்களின் திட்டமாகின்றதென்பதே முக்கிய விடயமாகின்றது.

இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு வளரக்கூடிய ஒரு தேசியத்தில் இஸ்லாமியரோ அல்லது அவர்களை ஒத்த ஏனைய மதத்தினரோ அன்றி ஏனைய சிறுபான்மை இனங்களோ இணைவது சாத்தியமற்றதாகி விடுகின்றது. வேறு வார்த்தையில் கூறுவோமானால் இப்படி பண்டைய இந்திய மரபு வழியிலிருந்து கட்டுவிக்கப்படும் தேசியமானது, இறுதியில், பாகிஸ்தான் என்ற தேசம் உருவாவதற்கும் வழி வகுப்பதாய் உள்ளதென்பதும் முக்கிய விடயம் ஆகும். ஆனால், இப்படிப்பட்ட  ஒரு பின்னடைந்த அரசியலைக் கட்டுவிப்பதென்பது பிரிட்டிஷாரின் வழமையான பிரித்தாளும் சூழ்ச்சியின் ஒரு பகுதியே என்பது கவனிக்கத்தக்கது.

லார்ட் கார்சனின் பேச்சுக்கு, எதிர் வினையாற்றும் பாரதி இச்சூழ்ச்சிகளைத் தன் இளவயதில் கண்டுணர்கின்றானா அல்லது அதற்கு வெறுமனே பலியாகி போய்விடுகின்றானா என்பது கேள்வியாகின்றது.

இக்காரணம் தொட்டே, அவனது “துளசி பாய்” என்ற கதையூடாக (1905 நவம்பர்) அவன் இத்தகைய மத அடிப்படைகளையும், மகமதியாரை (இஸ்லாமியரை) இரண்டாம் தர பிரஜைகளாகக் கருதும் இனவாத போக்கினையும் தீவிரமாக எதிர்த்து எழுதியவனாக இருக்கின்றான்.

இது அவனது அரசியல் புரிதலா அல்லது இயல்பான அவனது இதயத்தின் வெளிப்பாடா என்பது தெரியவில்லை. (சிந்தனையா அன்றி சித்தமா).

ஆனால், இம்முளைகளுடன் பயணிக்கும் அவன், பிரிட்டிஷாரின் பிரம்மாண்டமான அரசை எதிர்கொள்ள வேண்டியவனாகின்றான். இதனை எவ்வாறு அவன் சாதிக்க முனைகின்றான் என்பது வினாவாகின்றது.

அதாவது, பிரிட்டிஷாரை எதிர்ப்பது என்பது வெறுமனே திலகர் வகைப்பட்ட ஓர் எதிர்ப்புதானா அல்லது அதனையும் தாண்டி பயணிக்கும் ஒன்றா என்பதே வினாவாகின்றது.

03

இவை ஒருபுறமிருக்க, 1906இல், இவ் இளைஞன், மறுபுறத்தே, காங்கிரசையும் எதிர்கொள்ள வேண்டியவன் ஆகின்றான். இதனது மொத்த விளைவு, அவன் கடமையாற்றக்கூடிய “சுதேச மித்திரனிலும்” எதிரொலிக்காமல் இல்லை.

காங்கிரஸ் பொறுத்து அவன் எழுதுவது: “காங்கிரஸ் மகாசபை வருஷம் தோரும் கூடி வருவதால் பயன் ஒன்றும் கிடையாதென்று நாம் சொல்ல வரவில்லை. ஆனால் அதிலிருந்து நாம் எதிர்பார்த்தபடி அத்தனை பயன் கிடைக்கவில்லை. சீர்திருத்த(ம்) சம்பந்தமாக இதுவரை காங்கிரசிடமிருந்து உயர்ந்த நன்மைகள் எதுவும் வந்துவிடவில்லை…” (பக்கம் 245)

“…ரணடே என்ற உத்தம தேசபக்தர் வருஷந்தோரும் கூடும்… காங்கிரஸை ஒரு புண்ணிய சமாஜமென்று கருதி வந்தார். காங்கிரசுக்கு போவது தீர்த்த யாத்திரைக்கு செல்வதற்கு நிகரென்று எண்ணினார்…” (பக்கம் 246)

“…இப்போது மற்றொரு சமுசயம் இருக்கிறது. அதாவது, காங்கிரஸ் விஷயத்தில் இத்தேசத்தார் செலவிடுகின்ற பணத்திற்கும், முயற்சிக்கும் அதிலிருந்து கிடைக்கும் பயன் போதுமானதா என்னும் சமுசயமேயாகும். செலவை குறைக்கும் விஷயத்திலும் காங்கிரஸ் கூட்டத்தார் தம்மால் கூடியவரை பிரயத்தனங்கள் செய்ய வேண்டுமென்றே நமக்கு தோன்றுகிறது.” (பக்கம் 246)

டம்பப் பேச்சையும், செலவையும் குறைத்து உண்மை உணர்வுள்ள கூட்டத்தினரை காங்கிரஸில் சேர்த்தாக வேண்டுமென்று வெறிகொள்ளும் பாரதி, பின்வருமாறும் கூறுகின்றான்.

“ஒரு நாளும் காங்கிரஸின் கெஞ்சுதல்களுக்கு செவி கொடுக்க போகாதவர்களாகிய கவர்மண்டாரை மீட்டும் மீட்டும் கெஞ்சுவதே தொழிலாக வைத்துக் கொண்டிருப்பதை நிறுத்திவிட்டு ஜனங்களின் அறிவு விருத்தி, பயிற்சி என்பவற்றையே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்…”(இந்தியா: 07.07.1906: பக்கம் 245)

காங்கிரஸுக்கு எதிராக முன்வைக்கப்படும், பாரதியின் இக்கடுமையான விமர்சனம், எந்தளவில் காங்கிரஸைப் பாதிக்கும் என்பதனை விட “சுதேச மித்திரனில்” அது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதே கேள்வியாகின்றது. ஏனெனில், “சுதேச மித்திரனின்” ஆசிரியரான ஜீ. சுப்பிரமணிய அய்யரின் அரசியல் நிலைப்பாடு யாதென்றால் அவர் காங்கிரஸின் மிதவாத அரசியலைச் சார்ந்தவர் என்பதேயாகும்.

ஆனால் பாரதி என்ற இவ் இளைஞனோ திலகர் அரசியலின் தீவிர தன்மைகளை ஆராதிப்பவன் ஆகின்றான். ஜீ.சுப்பிரமணிய அய்யர் அவர்கள் தனது “சுதேச மித்திரனின்” இவ் வாதத்திற்கு எதிரான வாதத்தை அரங்கேற்றியிருக்க தவறினார் இல்லை. இதன் காரணத்தினாலேயோ என்னவோ பாரதி, காங்கிரஸ் தொடர்பிலான இவ் விமர்சன கட்டுரையை “இந்தியாவிலேயே” எழுதுகின்றான். “இந்தியா” பத்திரிக்கையில் அவன் எழுதக்கூடிய முதல் இரு கட்டுரைகளில் இதுவும் ஒன்றாகின்றதென்பது குறிப்பிடத்தக்கது.

சுருக்கமாகக் கூறுவோமானால், ஒன்று காங்கிரஸின் தீவிர அரசியல் பிரிவை இவன் சார்ந்து நிற்பதை இக்கட்டுரை காட்டும் அதேவேளை “சுதேச மித்திரனை” விட்டு நீங்கி இந்தியாவில் இவன் இணைவதற்கான அடிப்படைகள் உருவாகுவதையும் மேற்படி கட்டுரை எதிரொலிப்பதாகவே இருக்கின்றது.

04

இதேவேளை “டெலிகிராப்” எனும் பத்திரிக்கையானது, காங்கிரஸ் பெருந்தொகை பணத்தைச் செலவிடுவதை நிறுத்திவிட்டு, பஞ்ச நிவர்த்தி பொருட்டு, செலவு செய்தல் நன்று என உபதேசம் செய்கின்றது. (பக்கம் 245)

இது குறித்து பாரதி கூறுகின்றான்: “டெலிகிராப்” பத்திரிக்கையானது காங்கிரஸில் நம்பிக்கை இல்லாததைப் போல நடித்துக் கொண்ட போதிலும் உண்மையில் அதன் அபிப்பிராயம் அவ்வாறு இருக்க மாட்டாதென்றே நம்புகின்றோம்…

ஊடகங்கள் தொடர்பாக பாரதி கொள்ளும் இச்சந்தேகக்கண், குறிப்பிடத்தக்கதாகின்றது. ஈரான், ஷாவினது அன்றைய கூற்று: “அமெரிக்க மேலாதிக்கமானது பல்வேறு விடயங்களைக் கட்டுப்படுத்துகின்றது. ஊடகங்கள், வங்கிகள், நிதி நிறுவனங்கள்- இப்படி இவை பல்தரப்பட்டவையாகின்றன. ஊடகங்கள், அவர்களின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கேற்ப அச்சொட்டாக நடந்து கொள்வதில் அக்கறை செலுத்துகின்றன. நியூயோர்க் டைம்ஸ்: இது, இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துவதாய் இருக்கின்றது. இஸ்ரேலியருக்கும் அரபு தேசங்களுக்குமிடையிலான உறவை கட்டுவிப்பதும் அவற்றைச் சீர் செய்து தருவதும் இப்பத்திரிக்கைகளே. வொஷிங்டன் பத்திரிக்கையின் கதையும் இதுவேதான்

பல வருடங்களின் முன் ஆற்றியிருக்கக்கூடிய “ஷாவின்” இந்தக் கூற்று, பாரதியின் நாட்களில் இருந்தும் தொடர்வதாய் தெரிகின்றது. ஆதிக்கச் சக்திகளின் அடிப்படை நலன்களை எடுத்தேந்தும் இவ் ஊடகங்கள், அவ்வவ் காலத்திற்குரிய, தகுந்த சூழ்நிலைகளை தோற்றுவிக்கின்றன அல்லது திரிக்கின்றன அல்லது மயக்கங்களை உண்டு பண்ணுகின்றன. இவ்வூடாட்டமானது ஆழ வேரோடுவது.

இதனையே பாரதி, தன் இளமைக்காலத்தில் கண்டுகொள்கின்றான். பின் அதனை, எதிர்க்கத் துணிவதனையும் மேற்படி வரிகள் காட்டுவதாய் அமைகின்றன. “டெலிகிராப்” குறித்த “இன்றைய” ஒரு பதிவானது, எவ்வாறு இப்பத்திரிக்கை, இந்திய விடுதலை போருக்கு எதிராக அன்று செயற்பட்டிருந்தது என்பதனைப் பதிவிடுவதாக உள்ளது.

சுருக்கமாகக் கூறினால், இவ் இளைஞன், சமரசமற்ற ஒரு முறையில் அந்நிய ஊடகங்களுக்கு எதிராகச் செயற்படுபவனாகின்றான்… சமரசமற்ற இவனது இப்பண்பு, அதிக விலையினைக் கோர கூடியது என்பது தெளிவு. பத்திரிகைகளின் மகுடித்தனம் பொறுத்து இவன் கூறுவது: ஜனங்களுக்குள்ளே மனோவிரோதத்தை ஏற்படுத்துதல்… நமக்கு வெறுப்புத்தருகின்றது. (இந்தியா: 07.07.1906: பக்கம் 256.)

Punch போன்ற அங்கத சஞ்சிதைகள் முதல் உலகம் ஈராக தோன்றக்கூடிய முக்கிய பத்திரிகைகள் அனைத்தையும் அலசி ஆராயும் இவ் இளைஞன், ஊடகங்கள் பொறுத்து தனது சமரசமற்ற தன்மையை வியக்கும் அளவில் வளர்த்துக் கொள்கின்றான்.

இதே ஊடகங்களின் வாயிலாக (ராய்ட்டர்) ஜூலை 1906 இல் அவன் எழுதுகின்றான்: …”ருஷ்யாவில் இராஜாங்க புரட்சிக்குரிய சின்னங்கள் ஏற்பட்டு வருகின்றன… சில இடங்களிலே நிலச்சேனையுடன், சேனை வேலைக்காரர்களும் (விவசாயிகள்) இராணுவமும் கலகம் தொடங்கி தொழிலாளிகளின் கூட்டமும் சேர்ந்து விடுகின்றன…” (பாரதி தரிசனம்: இந்தியா: 30.07.1906: தொகுப்பு: இளசை மணியன்: பக்கம் 300)

ஆக, அன்றைய ரஷ்யாவில் விவசாயிகள், இராணுவம், தொழிலாளர்கள் ஆகிய மூன்று சக்திகளும் ஒன்றிணைந்து ரஷ்ய புரட்சியை அரங்கேற்றுவதை இப்படியாக இவன் இந்திய மக்களுக்கு அறிமுகம் வைக்கின்றான்.

மொத்தத்தில் காதல், சிறை, இந்து மத தூஸிப்பு, காங்கிரஸிற்கு எதிரான விமர்சனங்கள், அதனை மக்கள் சார்பினதாய் மாற்றும் இவனது ஆவல், பின் “சுதேச மித்திரனை” விட்டு நீங்குதலுக்கான அடியெடுப்பு, ஊடகங்களின் பொய்மை – இவற்றுடன் ரஷ்ய புரட்சிக்கான அடித்தளம் எனப் பரிணமிக்கும் இவனது விசாலப் பார்வை, இவனது 24ஆம் வயதில் நடந்தேறுகின்றது என்பதே, குறிப்பிடத்தக்கதாகின்றது.

(வணக்கத்துடன் : கால வரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்- தொகுப்பு 1 : சீனி. விசுவநாதன்- பக்கம்: 278 வரை)

lux.jothikumar@gmail.com

பாரதியார் ஓவியம்: நன்றி இந்து தமிழ்

Leave a comment